மட்டக்களப்பு: கண்ணிவெடியில் சிக்கிய ரயில்3 பேர் காயம் - இலங்கையில் பதட்டம்
கொழும்பு:மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் தமிழர்கள் இருவரை சிலர் கடத்திச் சென்று கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட இருவரின் உடல் அடக்கம் இன்று நடந்தது. இந்தச் சூழ்நிலையில் வாகனேரி பகுதியில் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஒரு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில், ரயில் பாதை சேதமடைந்தது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தண்டவாளத்திலிருந்து ரயில் விலகிச் சென்று பின்னர் நின்றது. அதிர்ஷ்டவசமாக ரயில் கவிழ்ந்து விழவில்லை.
இதற்கிடையே, ஜப்பான் அமைதித் தூதர் யசுஷி அகாஷி நேற்று 5 நாள் பயணமாக கொழும்பு வந்து சேர்ந்தார். இரு தரப்புக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலைத் தணிக்கும் முயற்சியாக அகாஷி கொழும்பு வந்துள்ளார்.
அதிபர் ராஜபக்ஷே, அவரது தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார். மேலும் மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் அகதிள் முகாம்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.