கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியைநிராகரித்தார் போர்டு-எம்புரேவும் எஸ்கேப்
லண்டன்:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என தென் ஆப்பிரிக்காவின் கிரகாம் போர்டு கூறி விட்டார். அதேபோல, இங்கிலாந்தின் ஜான் எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டேவ் வாட்மோர், அர்ஜூன ரணதுங்கா உள்ளிட்ட பலருடைய பெயர்களைப் பரிசீலித்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு, இங்கிலாந்தின் ஜான் எம்புரே ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
சென்னையில் கூடிய தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு இருவரும் அழைக்கப்பட்டு தனித் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரகாம் போர்டு புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாரியத்தின் பொருளாளர் சீனிவாசன் அறிவித்தார்.
ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிரிச்சி அளிக்கும் வகையில் இப்பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார் போர்டு. போர்டு தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான கெண்ட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும், அதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை ஏற்க இயலாத நிலையில் உள்ளதாகவும் போர்டு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தீவிர பரிசீலனைக்குப் பின்னர் கெண்ட் அணியின் பயிற்சியாளராக தொடர முடிவு செய்துள்ளேன். மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த முடிவை எடுத்துள்ளேன். என் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்த நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஆனால் எனது குடும்பத்தினருக்காக நான் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் போர்டு.
இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக வாட்மோர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.ஆனால்அவரை சில மூத்த வீரர்கள் விரும்பவில்லை.இதனால் வாட்மோரை கண்டு கொள்ளவில்லை கிரிக்கெட் வாரியம்.
ஆனால்,ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவம் இல்லாத கிரகாம் போர்டை தேர்வு செய்தது. இதற்கு ஒரே காரணம்,கிராகம் போர்டு வேண்டும் என்று கேப்டன் டிராவிடும், மூத்த வீரர்களும் கேட்டதால்.
நேர்காணலுக்கு வந்த அனுபவம் வாய்ந்த ஜான் எம்புரேவையும் இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. ஆனால் அவரும் தன் பங்குக்கு கிரிக்கெட் வாரியத்திற்கு கடுப்படித்துள்ளார். போர்டு நிராகரித்து விட்ட நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என்று கூறி விட்டார் எம்புரே.
போர்டும்,எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டதால் கிரிக்கெட் வாரியம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கவுள்ளது.