பிரதீபா பாட்டீல்: மண்ணின் மைந்தருடன் மோதும் மருமகள்
ஜெய்ப்பூர்:சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்ற பாடுபடுவேன் என காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில ஆளுனராக உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்தை மணந்துள்ளார்.
பாஜக கூட்டணி ஆதரவுடன் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுவார் என தெரிகிறது. இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். எனவே இந்த தேர்தல் ராஜஸ்தான் மாநில மண்ணின் மைந்தருக்கும் மருமகளுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.
இதுகுறித்து பிரதீபா பாட்டீல் கூறுகையில்,
நாட்டின் மிக உயரிய பதவிக்கு வேட்பளராக நிறுத்தப்பட்டுள்ளது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் கெளரவம், இதை கனவிலும் தான் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை அளித்த சோனியா காந்திக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சேர்ந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் என் பெருமதிப்பிற்குரியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அடுத்தது என்ன நடக்கும் என தெரியாது.
இந்த பதவி மூலம் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற பாடுபடுவேன். வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன் என்றார்.
சிறந்த வழக்கறிஞரான இவர் இதுவரை எந்த தேர்தலிலும் தோல்வியை காணாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டபேரவை, மக்களை ஆகியவற்றில் போட்டியிட்டபோது எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர்.












Click it and Unblock the Notifications