ரஜினியோடு சிவாஜி படம் பார்த்த ஜெ.!!
சென்னை:சிவாஜி பட டிக்கெட்டுக்கள், பிளாக் மார்க்கெட்டில் மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது. கள்ள டிக்கெட்டுக்களை விற்றதாக 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவாஜி நேற்று உலகெங்கும் திரையிடப்பட்டது. இதனால் தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் வெள்ளமெனத் திரண்டனர். ஏற்கனவே முன் பதிவு செய்து வைத்த ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்த்தனர். ஆனால் டிக்கெட் இல்லாத பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கிச் சென்று படம் பார்த்தனர்.வடபழனியில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் 10 ரூபாய் டிக்கெட்டை ஒருவர் 500 ரூபாய்க்கு விற்றாராம். இதேபோல 1000 ரூபாய் வரைக்கும் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட்டுக்கள் நேற்று விற்கப்பட்டன.
நேற்று மட்டும் திருட்டுத்தனமாக டிக்கெட் விற்றதாக 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள்.
ஜெயலலிதா பார்த்தார் ..
நேற்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிவாஜி படத்தை பார்த்து ரசித்தார். வடபழனியில் உள்ள ராஜேஸ்வரி திரையரங்குக்கு படம் பார்க்க வந்த ஜெயலலிதாவை ஏவி.எம். சரவணன், ரஜினிகாந்த், எம்.எஸ்.குகன் ஆகியோர் வரவேற்றனர்.
படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஜெயலலிதா, செய்தியாளர்களிடம் பேசுகையில், படம் நன்றாக உள்ளது. ஏவி.எம். நிறுவனத்திற்கு இது இன்னும் ஒரு வெற்றிப் படமாக அமையும். ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
ரசிகர்கள் கொண்டாட்டம் ..
சிவாஜியை ரஜினி ரசிகர்கள் படு கோலாகலமாக கொண்டாடினர். பல தியேட்டர்களில் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. சேலத்தில், ஆடு வெட்டிப் பலி கொடுத்து கோவில் விழா போலக் கொண்டாடினர். சில ஊர்களில் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியபடி ஊர்வலமாக சென்றும் சிவாஜியை ரசித்தனர்.
பாலக்காட்டில், நேற்று அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. பெரும் திரளான ரசிகர்ள் நீண்ட வரிசையில் காத்திருந்து படம் பார்த்தனர்.
கர்நாடகத்தில் 17 தியேட்டர்களில் நேற்று சிவாஜி திரையிடப்பட்டதாம். கேரளாவில் 86 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டது. ஆந்திராவில் 350 தியேட்டர்களில் சிவாஜியை ரிலீஸ் செய்துள்ளனர். இதில் ஹைதராபாத்-செகந்தரபாத் இரட்டை நகரங்களில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜியை ரிலீஸ் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications