ரயிலில் பிரசவித்த ஆட்டோ டிரைவர் மனைவி
ஜோலார்ப்பேட்டை:சென்னையிலிருந்து ஈரோடுக்குச் சென்று கொண்டிருந்த பெண், ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்டு ரயில் கழிப்பறையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஈரோடு அருகே உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் சென்னை அடையாறைச் சேர்ந்த மந்திர மூர்த்தி என்ற ஆட்டோ டிரைவருக்கும் கல்யாணம் நடந்தது.
கல்யாணத்திற்குப் பின்னர் கவிதா கர்ப்பமானார். பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் செல்ல தீர்மானித்தார் கவிதா. சங்ககிரி செல்வதற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பினார். நேற்று அதிகாலை ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து ரயில் கழிப்பறைக்குச் சென்றார் கவிதா. அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரயில்வே டாக்டர், அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
குழந்தையின் எடை குறைந்து இருந்ததால், உடனடியாக தாயையும், சேயையும் ஜோலார்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications