திருப்பூரில் ரயில்களை நிறுத்தாமல், புதிய தொழில்நுட்பத்தில் ரயில்வே சுரங்கப்பாலம்.. எப்படி சாத்தியம்?
திருப்பூர்: இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்று போற்றப்படும் திருப்பூரில் ரயில்வே மேம்பாலம் என்பது ரயில் நிலையத்தின் மேலே உள்ளது. அதன்பிறகு சுற்றிலும் ரயில்வே கேட்டுகள் தான் அதிகம். அந்த வகையில் ஊத்துக்குளி நோக்கி செல்லும் ரயில் பாதையில் பாளையக்காடு ரயில்வே கேட் மிகவும் பிஸியாக இருக்கும். இங்கு ரயில் போக்குவரத்தை நிறுத்தாமல், புதிய தொழில்நுட்பத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதை வேலைகள் நடைபெறும் திருப்பூர் - ஊத்துக்குளி - ஈரோடு தடம் என்பது மேற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவை, சென்னை மற்றும் வட இந்தியாவுடன் இணைக்கும் 'மெயின் லைன்' ஆக இருக்கிறது. இந்த தடத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக 80 முதல் 100 ரயில்கள் (இரு மார்க்கங்களிலும் சேர்த்து) கடந்து செல்கின்றன. இதில் எக்ஸ்பிரஸ், சூப்பர்ஃபாஸ்ட், பேசஞ்சர் மற்றும் சரக்கு ரயில்களும் கடந்து செல்கின்றன. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 40 முதல் 50 முறை இந்த ரயில்வே கேட் இங்கே மூடப்படுகிறது.

ரயில்வே விதிகளின்படி, ஒரு ரயில் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே கேட் மூடப்படுவது வழக்கம். திருப்பூர் ரயில் நிலையம் மிக அருகில் இருப்பதால், ரயில்கள் மெதுவாக வரும்போதும், சிக்னலுக்காகக் காத்திருக்கும் போதும் கேட் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டிருக்கும். அதாவது, பகல் நேரத்தில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கேட் மூடப்படும் நிலை இருக்கிறது.
கேட் மூடப்படும் போது எல்லாம் பாளையக்காடு கேட் பகுதி ஒரு "நரகமாக" மாறும். கொங்கு மெயின் ரோடு மற்றும் கொடிக்கம்பம் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்துக் கனரக வாகனங்களும், தொழிலாளர்களும் பரிதவித்து போகிறார்கள். பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பள்ளி/கல்லூரி வாகனங்கள், கொங்கு மெயின் ரோட்டிற்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் என இருபுறமும் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் ரயில் பாதையில், பாளையக்காடு வரை 2 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் முதல் கேட் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. இதனால் அந்த வழியாக யாரும் செல்ல முடியாது. தற்போது இந்த பாதையில் 2-வது ரெயில்வே கேட் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை மூடி சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுதுது இந்த கேட்டை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக, அருகிலேயே தண்டவாள பகுதியில் சுரங்கபாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிகாஸ்ட் முறையில் (ரெடிமேடாக கான்கிரீட் பாலம் தயார் செய்தல்) பாலம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதாவது ரயில் சேவையை நிறுத்தாமல் தண்டவாளத்தின் அடியில் தோண்டி அதனுள் கான்கிரீட் பால அமைப்புகளை செருகி பாலம் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டன. மேலும் முதல் கட்டமாக பாலம் அமையும் இடத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த இரும்பு பாலத்துக்கு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு அதனுள் சிமெண்டு பால பகுதிகளை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது தோண்டப்பட்ட இடத்தின் அடியில் சிமெண்டு கான்கிரீட் போடுவதற்கு பதிலாக அதற்காக ரெடிமேடாக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சிமெண்டு சிலாப்புகள் வைக்கப்பட்டன. அதன்மேல் செவ்வக வடிவிலான கான்கிரீட் பால பகுதிகளை கிரேன்கள் மூலம் வைக்கும் பணிகள் சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கான்கிரீட் பால பகுதிகளை வைக்க ஆகும் நேரம், அந்த நேரத்தின் ரயில் சேவை குறித்தும் கணக்கிடப்பட்டது.
மொத்தம் உள்ள 12 கான்கிரீட் பால அமைப்புகளை பொருத்த தேவைப்படும் காலத்தை அதைக்கொண்டு கணக்கிட்டு பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் அமைக்கும் பணியின்போது ரயில் சேவையை நிறுத்தாமல் பணிகளை மேற்கொள்ள ரெயில்வே அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த பணி முடிந்தால் ஊத்துக்குளி சாலையில் செல்லும் மக்களுக்கு விடிவு காலமாக இருக்கும்.














Click it and Unblock the Notifications