புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் கன மழைசூறாவளியால் ஊட்டி ஸ்தம்பித்தது
சென்னை:தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய லேசான மழை பெய்து வருகிறது.
விடாமல் மழை பெய்து வருவதால், வெயிலில் வெந்து போய்க் கிடந்த சென்னை மக்கள் மனம் குளிர்ந்துள்ளனர். வங்கக் கடலில் ஆந்திரா அருகே புயல் சின்னம் உருவாகியிருப்பதால்தான் இந்த மழை பெய்து வருவதாகவும், இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் இதர கடலோரப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
காலை முதல் இரவு வரை தினசரி மழை பெய்து வருவதால் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மலைப் பயிர்களும் இந்த தொடர் மழையால் பலத்த சேதம் அடைந்துள்ளன. உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் அழுகிப் போய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேயிலைத் தோட்டங்களும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4 மணிக்கு மேல் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டத் தொடங்கியது. இதனால் பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில்தான் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் இந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் இரவு 11 மணிக்கு மேல்தான் வீடுகளுக்குப் போய்ச் சேர முடிந்தது,.
மஞ்சூர் என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், சூறாவளிக் காற்றால் பிய்த்துக் கொண்டு போயின. பல இடங்களில் விளம்பர போர்டுகளும் பிய்த்துக் கொண்டு பறந்தன. மின்தடையும் ஏற்பட்டதால் மஞ்சூரே இருளில் மூழ்கிக் கிடந்தது.
பெங்கால் மட்டம் என்ற இடத்தில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், ஊட்டி, குன்னூர் இடையிலான சாலைப் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
தொடர் மழை மற்றும் சூறாவளிக் காற்றால் நீலகிரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications