தண்ணீர், தண்ணீர்..! இஸ்ரேலை நாடும் தமிழகம்
சென்னை:தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இஸ்ரேல் நாட்டுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் நிறுவனங்களிடம் உதவியையும் கோரியுள்ளது.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இஸ்ரேல் தூதரகம் சார்பில் தண்ணீர்: நகர்ப்புற தமிழகத்தின் பார்வை என்ற பெயரில், ஒரு கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
இந்த கருத்தரங்கில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள நகரங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற இயற்கைய வளத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. வேறு வழி தமிழகத்திற்கு இல்லை.
எதிர்காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதற்குள் இப்போதே மாற்று வழிகளை காணவும், நீண்ட காலத் திட்டங்களை நிறைவேற்றவும் உகந்த நேரம் வந்து விட்டது.
இஸ்ரேலில் தண்ணீர் வளம் மிகவும் குறைவு. ஆனால் அவர்கள் தண்ணீர்ப் பற்றாக்குறைய மிகத் திறமையாக சமாளித்து வெற்றி கண்டுள்ளனர். எனவே இஸ்ரேலின் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை தமிழகத்திலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக இஸ்ரேல் நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது என்றார் துரைமுருகன். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியும் நிகழ்ச்சியில் பேசினார்.
மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அதிகாரி டேணியல் ஜோகர் சோன்ஸைன் பேசுகையில், அதி நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் தனது தண்ணீர்ப் பிரச்சினைய தீர்த்துக் கொண்டுள்ளது.
இதே தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தண்ணீர் சுத்திகரிப்பு, வடிகட்டுதல், மழை நீர் வடிகால் உள்ளிட்டவற்றில் தமிழக அரசுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications