மரத்தில் கட்டி, மொட்டை போட்டு, செருப்பால் அடித்து...
புதுக்கோட்டை:
கலப்பு திருமணம் செய்து கொண்டார், தனது பூர்வீக சொத்தில் பங்கு கேட்டார் என்பதற்காக ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, மொட்டை போட்டு, செருப்பால் அடித்து பஞ்சாயத்து தீர்ப்பு என்ற பெயரில் அவமானப்படுத்திய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாலூர் அருகே உள்ள மாதிவெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 1984ம் ஆண்டு வேறு சாதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இறந்து போனார். இதைத் தொடர்ந்து பூர்வீக சொத்தில் தனது பங்கைப் பிரித்துத் தருமாறு ஊர் பஞ்சாயத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கடந்த 7ம் தேதி ஊரின் நடுவில் உள்ள மந்தையில் ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. நாட்டாமை கண்ணன் பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கினார்.
சுப்பிரமணியன் தனது மகன் ராஜேஷ் கண்ணனுடன் இதில் கலந்து கொண்டார். அப்போது ஊர்ப் பஞ்சாயத்தில் இடம் பெற்றிருந்த பெரியவர்கள், கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் உனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என்று பஞ்சாயத்தார் கூறியுள்ளனர்.
மேலும் சுப்பிரமணியனை மரத்தில் கட்டி வைத்து, மொட்டை அடித்து, செருப்பால் அடிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி சுப்ரமணியன் ஊர் நடுவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, மொட்டை அடித்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தப்பட்டார்.
அவர்களிடமிருந்து மீண்டு வந்த சுப்பிரமணியன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் நாட்டாமை கண்ணன் உள்ளிட்ட 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications