மதுரை மேற்கு: கோபால்சாமி அதிருப்தி
மதுரை:மதுரைக்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, விமான நிலையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நேற்று திடீரென மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாகி, கணேஷ் ராவ் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, காவல்துறை ஆணையர் சஞ்சீவ் குமார், தேர்தல் அதிகாரி திணேஷ் பொன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் கோபால்சாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் கோபால்சாமி பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை, தேர்தல் பார்வையாளர்கள் இன்னும் தரவில்லை. அதற்கு அவகாசம் இன்னும் இருக்கிறது என்றார் கோபால்சாமி.
பின்னர் அவர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கோபால்சாமி அங்கு பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இன்னும் திருப்தி ஏற்படவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நடந்து கொண்ட விதம் வேதனை அளிப்பதாக உள்ளது.
திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பதை அறிய நாளை (இன்று) வரை காத்திருங்கள் என்றார் கோபால்சாமி.