கல்யாண ஏக்கம்-அண்ணி மீதுஎண்ணெய் ஊற்றிக் கொன்ற பெண்
விழுப்புரம்:கல்யாணம் நடக்காத கோபத்தில், அண்ணன் மனைவி மீது ஆத்திரமடைந்த பெண், அவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிக் கொலை செய்தார். அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி விக்கிரவாண்டியைச் சேர்ந்த உமாதேவி. இவர் புதுவை அரசின் மாவட்ட தொழில் மையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.
![]() |
இவர்களுக்கு சரத், அஸ்வின் என்ற 2 குழந்தைகள் உள்ளன. ராஜா தனது தாயார் ஜெயலட்சுமி, தங்கை புவனேஸ்வரி ஆகியோருடன் தங்கியுள்ளார்.
புவனேஸ்வரிக்கு மாப்பிள்ளை அமையாமல் திருமணம் தள்ளிப் போய் வந்தது. இதனால் அவர் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் உமாதேவி உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே அஸ்வின் தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது புவனேஸ்வரி, அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து வந்து உமாதேவி மீது ஊற்றியுள்ளார். கொதிக்கும் எண்ணெய் முகத்திலும், உடலிலும் பட்டதால் அலறித் துடித்தார் உமாதேவி. அஸ்வின் மீதும் எண்ணெய் பட்டதால் அவனும் அலறியுள்ளான்.
சத்தம் கேட்டு ஜெயலட்சுமி ஓடிவந்தார். நடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உமாதேவியும், அஸ்வினும்
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உமாதேவி சிகிச்சை பலனின்றி இறந்தார். அஸ்வின் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருமண ஏக்கத்தால் மன உளைச்சல் அடைந்திருந்ததால் உமாதேவி மீது எண்ணெயைக் கொட்டி புவனேஸ்வரி கொன்றிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.













Click it and Unblock the Notifications