சச்சின் ஆடியும் இந்தியா தோல்வி!
பெல்பாஸ்ட்:
சச்சின் டெண்டுல்கரும், கேப்டன் ராகுல் டிராவிடும் சிறப்பாக ஆடியும் கூட, தென் ஆப்பிரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து அணியை அயர்ன் செய்து அசத்திய இந்தியா நேற்று தென் ஆப்பிரிக்காவை சந்தித்தது.
![]() |
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கங்குலி 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கம்பீரோ டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இருப்பினும் பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கரும், கேப்டன் டிராவிடும் சிறப்பாக ஆடினர். சச்சின் 99 ரன்கள் எடுத்திருக்கும்போது தேவையில்லாமர் ரன் அவுட் ஆனார். இதனால் அவரால் 42வது சதத்தை எடுக்க முடியாமல் போனது. சச்சினின் 99 ரன்களில் 12 பவுண்டரிகளும் அடக்கம்.
கேப்டன் டிராவிட் 93 பந்துகளை சந்தித்து 74 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 158 ரன்கள் எடுத்து இந்திய அணியின் மானத்தையும், ஸ்கோரையும் காப்பாற்றினர்.
![]() |
இவர்கள் விளையாடினால் போதும், நாமெல்லாம் ஆடத் தேவையில்லை என்று மற்ற பேட்ஸ்மென்கள் நினைத்தார்களோ என்னவோ, அவர்களுக்குப் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதியில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி முக்கிய விக்கெட்டுக்களை இழந்தபோதிலும் கூட சிறப்பாக ஆடி 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் கல்லிஸ் அபாரமாக ஆடி 91 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். டிவில்லியர்ஸ் 24 ரன்களும், வான் வைக் 44 ரன்களும் எடுத்தனர். கல்லிஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.














Click it and Unblock the Notifications