ஜெ. மீது வழக்கு: தேர்தல் ஆணையத்தின்கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
சென்னை:சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பான விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் விதிமுறைக்குப் புறம்பாக ஜெயலலிதா, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவு கடந்த 2002ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, 2001ல் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கு தொடர்பாக தங்களது கருத்தை கேட்ட பின்னர்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
திமுக சார்பில் ஆஜரான வக்கீல் சண்முகசுந்தரம், இது வழக்கை இழுத்தடிக்க நடக்கும் முயற்சி. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக உள்ளது என்றார்.
அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு விளக்கம் தரப் போவதில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications