மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை11 மணிக்குள் முடிவு தெரியும்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ளது. 11 மணிக்குள் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மேற்குத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக பீகார், உ.பி. மாநில பாணியில், முற்றிலும் மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு வாக்குப் பதிவு என்பதால் முற்பகல் 11 மணிக்குள் முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்புப் பணியிலும் துணை ராணுவப் படையினரே பயன்படுத்தப்படவுள்ளனர். வெளிப் பாதுகாப்பில் மட்டும் தமிழக போலீஸார் பயன்படுத்தப்படுவர்.
இதற்கிடையே, 85 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவான 23 வாக்குச் சாவடிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 85 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தால் அந்த வாக்குச் சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை.
அந்த வகையில், நேற்று தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாகி, கணேஷ் ராவ், சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, தேர்தல் அதிகாரி திணேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது. வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.
வாக்காளர்கள் காட்டிய ஆவணங்கள், அவர்களின் கையெழுத்து, பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரி பார்க்கப்பட்டன. அதேபோல, வாக்குப்பதிவின் புகார் கூறப்பட்ட வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் குறித்த விவரமும் சரி பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பப்படும் என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications