ஜனாதிபதி தேர்தல்: பிரதீபா, ஷெகாவத் நேரடி மோதல்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலும், பைரான் சிங் ஷெகாவத்தும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட பிற வேட்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பைரான் சிங் ஷெகாவத் உள்பட 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று பரிசீலிக்கப்பட்டன. அப்போது, பாட்டீல் மற்றும் ஷெகாவத் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே முறையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்ற அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஆச்சாரி கூறுகையில், பிரதீபா பாட்டீல் தாக்கல் செய்த நான்கு வேட்பு மனுக்களும், ஷெகாவத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் மட்டுமே முறையாக இருந்தன. மற்றவை அனைத்தும் முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து பிரதீபா பாட்டீல் மற்றும் ஷெகாவத்தின் வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இத்தனை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை எதிர்காலத்தில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள். வெறும் விளம்பரத்திற்காகவே பலரும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். இதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார் ஆச்சாரி.
தேர்தலில் போட்டியிடும் ஷெகாவத் துணை குடியரசுத் தலைவராக இருப்பதால் அவருக்கு ஏற்கனவே போதிய பாதுகாப்பு உள்ளது. பிரதீபா பாட்டீலுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாகவும் ஆச்சாரி கூறினார்.
தொடர்ந்து ஆச்சாரி கூறுகையில், 7 வேட்பாளர்களுக்கு அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர் திருப்பித் தரப்படும்.
சில வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் பெயர்களை முன்மொழிபவர்களாகவும், வழிமொழிபவர்களாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அந்தப் பெயர்களில் எம்.பிக்களும் இல்லை, எம்.எல்.ஏக்களும் இல்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியாவைச் சேர்ந்த மோகன் ராமாயணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் ராமர், சீதை முன்மொழிபவர்களாகவும், ராவணனை வழிமொழிபவர்களாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சதீஷ் என்பவரோ, குடியரசுத் தலைவர் மாளிகை உள்ள பகுதி மால்சா பஞ்சாயத்தைச் தேர்ந்தது என்று கூறி அந்தப் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி இணைத்திருந்தார் என்று கூறினார் ஆச்சாரி.