பிரதீபா விலகினால் நாட்டுக்கு நல்லது: ஜெ.
சென்னை:நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலிலிருந்து பிரதீபா பாட்டீல் விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று ஜெயலலிதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு பலர் குடியரசுத் தலைவர்களாக வந்துள்ளனர். ஆனால் இதுவரை யாரைப் பற்றியும் இத்தகைய இழிவான குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்ததில்லை.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுவதால், குடியரசுத் தலைவர் பதவிக்குரிய கண்ணியம், மாண்பு சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குடியரசுத் தேர்தலிலிருந்து பிரதீபா பாட்டீலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வாபஸ் பெற வேண்டும். அல்லது பிரதீபா பாட்டீலே விலக வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதான். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான விதிமுறைகளை வகுத்த முன்னோடிகள் இதுபோன்றதொரு பிரச்சினை ஏற்படும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், மோசடி புகார்களுக்கு ஆளான ஒருவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். எனவே சொத்துக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சரியானதுதான்.
நாங்கள் அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்தோம். பாஜக கூட்டணி கலாம் போட்டியிட்டால் ஆதரிப்போம் என்றனர். அவர் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். பிரதீபா பாட்டீல், சோனியா காந்தி, கருணாநிதி போன்ற சில அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பிடித்த வேட்பாளர். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் பிரதீபா பாட்டீலை பலருக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் மனம் மாறி வாக்களித்து கலாம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் பிரதீபா பாட்டீல் போட்டியிடுவதால் தேசம் இன்று தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களது அணியின் நிலை குறித்து அறிய சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக காத்திருக்கிறோம். அவர் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு (நேற்று) சென்னை திரும்புகிறார். வந்த பின்னர்தான் எங்களது அணியின் நிலையை அறிவிப்போம்.
திமுக, பாமக மோதல் முற்றி வருவது குறித்து நாங்கள் எப்படிக் கருதுவோம் என்று நீங்கள் (செய்தியாளர்கள்) நினைக்கிறீர்களோ அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்.
பாமக எங்களது அணிக்கு வருமா என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். வருவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசியலில் நிரந்தர கூட்டணி என்று எதுவும் கிடையாது.
கூட்டுறவுத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த நிலையில் மாற்றம் இல்லை. அதற்கான காரணங்களையும் நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அதிமுகவினரை வேட்பு மனு தாக்கல் செய்யவே விடவில்லை. அடித்து, அரிவாள்களால் வெட்டி விரட்டப்பட்டனர். திமுகவுக்கு வேண்டியவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாம் முறைகேடாக நடந்தது.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தகுதி அடிப்படையில் புதிய உறுப்பினர்களை நியமித்து அதன் பின்னர் கூட்டுறவுத் தேர்தலை நடத்த அரசாணை பிறப்பித்தோம். இதை எதிர்த்து திமுகவினர் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து பின்னர் உச்சநீதிமன்றம் சென்றது.
2006ம் ஆண்டு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உச்சநீதிமன்றத்தில் இருந்த அந்த வழக்கை திமுகவினர் வாபஸ் பெற்று அதே பழைய உறுப்பினர்களைக் கொண்டு மீண்டும் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது எல்லாவகையிலும் முறையற்ற தேர்தல். வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற திமுக கூட்டணிக் கட்சியான பாமக தொண்டர்கள் கூட நேற்றைய தினம் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டப்பட்டதைப் பார்த்தோம். இதுதான் இன்று நிலவுகிற நிலைமை.
விரைவில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். அப்போது முறைகேடாக நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புத் தேர்தலையும், கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தல்களை நடத்துவோம்.
இரு சாராரும் தன்னைப் பற்றி குறை சொல்வதாக நரேஷ்குப்தா கூறியுள்ளார். தனது விளக்கத்தில் அவரே தெளிவாக சொல்லியுள்ளார். நான் கருத்து கூற விரும்பவில்லை. ரவுடிகள், குண்டர்கள் முன்பு தேர்தல் ஆணையமே எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications