கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு:தமிழகம் முழுவதும் முஸ்லீம்கள் போராட்டம்
சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த முஸ்லீம்கள் இன்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் தலைவர் ஜைனூலாப்தீன் தலைமை தாங்கினார்.
ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்திய அனைவரும் பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல நெல்லையில் வண்ணாரப்பேட்டை பகுதியிலும் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்து ஜைனுலாப்தீன் கூறுகையில், நீண்ட நாளாக நிலுவையிலுள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு இருந்தது. ஆனால் சில அரசியல் தலையீடுகள் காரணமாக அந்த உரிமை பறிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2 சதவீதம் மட்டுமே முஸ்லீம்களுக்கு வழங்கப்படுகிறது. இது போதாது. எனவே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் கருணாநிதியும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த போது, சட்டத்தில் ஏற்கனவே இதற்கான வழிவகைகள் உள்ளன என்று கூறியுள்ளார். எனவே முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க இதுவே தகுந்த நேரம் என்றார் அவர்.
சேலம், கோயமுத்தூர், திருச்சி, மதுரை, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications