ஜீப்புடன் மோதியது எங்கள் மகன்தான்- கபீல் பெற்றோர் ஒப்புதல்
பெங்களூர்:கிளாஸ்கோ விமான நிலையம் ஜீப்பை ஓட்டிச் சென்று மோதி வெடிக்கச் செய்தது தங்களது மகன் கபீல் அகமதுதான் என்று அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளதாக பெங்களூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்புடன் வந்து மோதி விமான நிலையத்தைத் தகர்க்க முயற்சி நடந்தது. இந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தங்களது முயற்சி தோல்வி அடைந்ததால் ஜீப்புக்கு தீவைத்தனர் அதில் வந்த இருவரும். இதில் ஒருவர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். மற்றொருவரான டாக்டர் பிலால் அப்துல்லா லேசான காயத்துடன் மீட்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டவர்தான் ஜீப்பை ஓட்டி வந்தவர். அவரது பெயர் கபீல் அகமது, இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் சபீல் அகமதுவின் அண்ணன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கபீல் அகமதுவின் பெங்களூர் வீட்டுக்கு பெங்களூர் போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டு தகவல்கள் சேகரித்தனர்.
விசாரணையின்போது ஜீப்புடன் சென்று மோதியது தங்களது மகன் கபீல் அகமதுதான் என்று அவரது பெற்றோர் டாக்டர் மக்பூல் அகமது, தாயார் ஜாக்கியா அகமது ஆகியோர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், அது எங்களது மகன் கபீல்தான் என்று கூறியதாக தெரிவித்தார்.
ஆனால் இதை மாநகர காவல்துறை ஆணையர் அச்சுதராவ் மறுத்துள்ளார். விசாரணையின்போது கபீல் அகமதுவின் பெற்றோர் இதுபோன்று எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் ராவ்.
பெங்களூர் டாக்டர்களுக்கும், இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் உள்ளதாக கூறப்படும் தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் ராவ்.
இதற்கிடையே கபீல் மற்றும் சபீல் அகமதுவின் வீட்டிலிருந்து ஒரு கம்ப்யூட்டர், சில ஹார்ட் டிஸ்குகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பெங்களூர் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்கள் குறித்து தீவிரமாக பகுக்கப்பட்டு வருகிறது.
இரு சகோதரர்களுக்கும் வந்த இ மெயில்கள், இன்டர்நெட் சாட்டிங் விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications