ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறப்பு?
சென்னை:மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் ஓரிரு நாட்களில் பாசனத்திற்காக அணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் அங்கு காவிரியின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கர்நாடக விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அணை மூடப்பட்டது.
இருப்பினும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபிணி அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 83 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்தவண்ணம் இருப்பதால் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் காவிரிப் பாசனத்திற்காக அணை திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications