கர்நாடகத்தில் கன மழை- நிரம்பும் அணைகள் மேட்டூருக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு
மேட்டூர்:கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை நீடித்து வருகிறது. இதனால் கபிணி, ஹேமாவதி ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இதையடுத்து அந்த அணைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹேமாவதி அணையின் மொத்த நீர் மட்டம் 2,922 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 5 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 32 ஆயிரம் கன நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 41 ஆயிரத்து 987 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 6,668 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் ெகாண்டுள்ளது.
அணையின் நீர் மட்டம் 115.20 அடியாக உள்ளது. மொத்த நீர் மட்ட அளவு 124.80 அடியாகும்.
இதேபோல கபிணி அணையின் நீர்மட்டமும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 2,284 அடி நீர் மட்டத்தில் தற்போது அணையில் 2,282 அடியாக நீர்இருப்பு உள்ளது.
கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாலும் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதாலும், தமிழகத்திற்கு அதிக அளவிலான காவிரி நீர் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளது.
90 அடியை நீர் மட்டம் தாண்டியவுடன் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications