தீவிபத்தில் கருகிய 94 குழந்தைகள்:கும்பகோணத்தில் கண்ணீர் அஞ்சலி
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கொடூர தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிருடன் கருகிப் பலியான சம்பவத்தின் 3வது ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்று கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 94 சிறு குழந்தைகள் அநியாயமாக கருகிப் பலியாகின.
![]() |
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி கும்பகோணத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் முன்பு சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 94 குழந்தைகளின் படங்களும் பெரிய பேனரில் வைக்கப்பட்டு அவற்றுக்கு பொதுமக்கள், குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குழந்தைகளின் சமாதிகளிலும் குடும்பத்தினர் படையல் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இரங்கல் பேரணிகளும் நடத்தப்பட்டன.
94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீக்காய சிகிச்சைப் பிரிவும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மாலையில், கும்பகோணம் மகாமக குளத்திற்கு அருகே இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications