100 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை!
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 100 அடியைத் தாண்டியது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரித் தாய்க்கு நன்றி கூறி சிறப்புப் பூஜை செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபிணி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகியவை நிரம்பி விட்டன.
இதையடுத்து இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தொட்டது. கிட்டத்தட்ட 190 நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடி ஆனது.
இதையடுத்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மேட்டூர் அணையில் சிறப்புப் பூஜை நடத்தினர். தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, மலர்கள் தூவி காவிரித் தாய்க்கு நன்றி கூறி வணங்கினர்.
இன்று காலை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி 100.68 அடியாக இருந்தது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 32 ஆயிரத்து 648 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து திருப்திகரமாக உள்ளதால் இன்னும் சில தினங்களில் முழுக் கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications