மேட்டூர் அணை நீர் மட்டம் 103.6 அடி:பவானி சாகர் அணை திறப்பு
மேட்டூர்:மேட்டூர் ஸ்டான்லி அணையின் நீர் மட்டம் 103.6 அடியை எட்டியுள்ளது.
பவானி சாகர் அணையிலும் நீர்மட்டம் 100 அடியை தொட்டது. இதையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி விட்டன. இதனால் உபரி நீரை காவிரியில் திறந்துவிட்டுள்ளது அந்த மாநிலம்.
இந்த நீர் மேட்டூரை அடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 103.6 அடியாக இருந்ததாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கு தொடர்ந்த நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விநாடிக்கு 41.873 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 104 அடியை தொட்டுவிடும்.
இதற்கிடையில் இன்று காலை கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த நீர் நாளை மேட்டூரை வந்தடையும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும்.
இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானி சாகர் திறப்பு:
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரோடு பவானி சாகர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையை போலவே 120 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் நீர்மட்டம் இன்று காலை நீர் மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
இதனால் 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டனர்.