பிரேசிலில் தரையிறங்கிய விமானம் பெட்ரோல்நிலையத்தில் மோதி 200 பேர் பலி
சா பாலோ: பிரேசிலின் சா பாலோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, நிலை தடுமாறி ஓடி, விமான நிலையத்தின் வெளியே இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில் 200 பேர் பலியாகிவிட்டனர்.
பிரேசிலின் போர்ட்டோ அலிக்ரே நகரிலிருந்து டாம் லின்ஹாஸ் ஏரியேஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் 320 விமானம் 170 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. சா பாலோ நகரில் உள்ள காங்கோஹாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அங்கு பலத்த பெய்து கொண்டிருந்ததால் விமான ஓடு தளம் மிக ஈரமாக இருந்தது. இதனால் ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்த அந்த விமானம் பாதையை விட்டு விலகி வழுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடியது.
விமான நிலையத்திற்குள் உள்ள சாலையை தாண்டி அருகிலிருந்த பெட்ரோல் மற்றும் கியாஸ் நிலையத்தின் மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்துக் கொண்ட எரிந்தது. இதில் பெட்ரோல் நிலையமும் வெடித்து சிதறியது.
தீப்பிடித்த விமானம் தாறுமாறாக ஓடி அருகிலிருந்த கட்டிடத்திற்குள் புகுந்தது. அந்த கட்டிடமும் தீப்பிடித்தது. விமானம் முழுவதுமாக கட்டிடத்திற்கு புகுந்து வெடித்துச் சிதறியது.
இதில் விமானத்தில் இருந்தவர்கள், கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள், சாலையில் இருந்தவர்கள், பெட்ரோல் நிலையத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 200 பேர் பலியாகிவிட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து விமானம் நிலையம் மூடப்பட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 154 பேர் உயிரிழந்தனர். அமேசான் காட்டுக்குள் விழுந்து அந்த ஜெட் விமானம் நொறுங்கியது. பிரேசில் நாட்டில் நடந்த மிகப் பெரிய விமான விபத்து இதுதான். இந்த நிலையில் அதை விட மோசமான விபத்தை பிரேசில் சந்தித்துள்ளது.
கான்கோன்ஹாஸ் விமான நிலையத்தின் ரன்வேயில் பல காலமாகவே பல பிரச்சினைகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் ரன்வேக்கள் சரி செய்யப்பட்டன. இந்த நிலையில் கோர விபத்தை அந்த விமான நிலையம் சந்தித்துள்ளது.