கலாமின் விளக்கவுரையுடன் திருக்குறள்- விரைவில் வெளியீடு
டெல்லி:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விளக்கத்துடன் கூடிய திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம் இந்த திருக்குறளை உருவாக்கியுள்ளது. 400 திருக்குறள்களை தேர்வு செய்து அவற்றுக்கு கலாம் பொழிப்புரை எழுதியுள்ளார். இந்த திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையத்தைச் சேர்ந்த குழு நேற்று இதுதொடர்பாக கலாமை டெல்லியில் சந்தித்துப் பேசியது.
பின்னர் குழுவின் தலைவர் டாக்டர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூலை எழுதி முடித்து விட்டதாக கலாம் தெரிவித்தார் என்றார் அவர்.
கலாமின் பதவிக்கலாம் வருகிற 24ம்தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் கலாம் பொழிப்புரையுடன் கூடிய திருக்குறள் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.
திருக்குறள் மீது தீராப்பற்று கொண்டவர் கலாம். தனது பேச்சுக்களின்போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது அவரது வழக்கம். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் கூட குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார் கலாம்.
கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம், கலாமுக்கு பஞ்சலோகத்தால் ஆன திருவள்ளுவர் சிலையைப் பரிசாக அளித்தது. 133 கிலோ எடை கொண்ட அந்த சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பு அறையில் 2004ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நிறுவினார் கலாம்.












Click it and Unblock the Notifications