மனைவியை வீட்டில் சிறை வைத்த கணவன்:எஸ்எம்எஸ் மூலம் போலீஸ் மீட்டது
ஈரோடு:வீட்டில் சிறை வைக்கப்பட்ட புதுப்பெண் எஸ்எம்எஸ் தகவல் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டார்.
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சதீஷ்(22) விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
கோவையில் வேலை பார்த்தபோது திருப்பூரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் கீர்த்தனாவை(21) காதலித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கீர்த்தனாவை அவரது குடும்பம் ஒதுக்கி வைத்துவிட்டது.
ஆனால், திருமணத்துக்குப் பின்னர் தான் சதீஷின் உண்மை உருவம் கீர்த்தனாவுக்குத் தெரிய வந்தது.
சதீஷ் ஒரு சந்தேக பேயாக இருந்துள்ளார். வேலைக்கு செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனாவின் மீது சந்தேகப்பட ஆரம்பித்தார்.
இதனால் வேலைக்கு செல்லும் போது கீர்த்தனாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிடுவாராம். தினமும் இரவு தான் வீடு திரும்புவார். இதனால் பகல் எல்லாம் வீட்டில் சிறை இருந்துள்ளார் கீர்த்தனா.
மேலும் அக்கம்பக்கத்து வீட்டினருடனும் பேச விடாமல் வைத்துள்ளார். செல்போனையும் சார்ஜ் செய்து தரவில்லை. தனது குடும்பமும் உறவினர்களும் தன்னை ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார் கீர்த்தனா.
இந் நிலையில் எப்படியோ கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ராஜேந்திரனின் செல் நம்பரை அறிந்த கீர்த்தனா, ப்ளீஸ் ஹெல்ப் மீ என மெசேஜ் அனுப்பியுள்ளார். (எஸ்எம்எஸ் அனுப்ப மட்டுமே அதில் கரன்சி இருந்துள்ளது)
இதைப் பார்த்த ராஜேந்திரன் உடனடியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, கீர்த்தனாவை மீட்க உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்எம்எஸ் மூலமே கீர்த்தனாவுடன் பேசிய போலீசார் அவர் சிறை வைக்கப்பட்ட வீட்டை அறிந்து கீர்த்தனாவை மீட்டனர்.
சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications