சத்துணவு முட்டையில் ட்யூ டேட் கட்டாயம்!
சென்னை: சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் பயன்படுத்துவதற்கான கால அளவு (ட்யூ டேட்) குறித்த முத்திரை அவசியம் இடம் பெற வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சேலம் மாவட்டம், வேப்பம்பூண்டி, சொக்கநாதபுரம், சித்தேரி மற்றும் ஊனத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டைகளை சாப்பிட்ட 270 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் குழந்தைகள் நலமடைந்தன. முட்டைகள் கெட்டுப் போயிருந்த காரணத்தால்தான் அவற்றை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி தங்கராஜ், விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு ஆணையத்தின் புலனாய்வு எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மனித உரிமை ஆணைய எஸ்.பி. சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று விசாரணை நடத்தி ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில், தரமற்ற முட்டையை கொடுத்ததால் தான் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
தரமற்ற முட்டையை கொடுத்த சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2ஆயிரம், சமையலருக்கு ரூ.500, சமையலரின் உதவியாளருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் 7 மாதம் கழித்து அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி தங்கராஜ் அரசுக்கு சத்துணவு முட்டை விநியோகம் குறித்து சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்.
அதில், முட்டையில் நல்ல முட்டை எது, கெட்ட முட்டை எது என்பதை சரிபார்க்கும் பழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் முட்டைகளை ஏன் சரிபார்க்கவில்லை?
இதற்காக சத்துணவு அமைப்பாளர்களையும், சமையல் வேலை செய்பவர்களையும் சஸ்பெண்ட் செய்தால் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடாது. முட்டையின் பயன்பாட்டின் கால அளவு தேதியை முத்திரையாக முட்டையின் மீது பதிக்க வேண்டும்.
முத்திரை குத்தியதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் பின்னரே அதை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். இதற்கென தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
முட்டைகளை தரம் பார்க்கும் கருவிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது மூலம் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்க முடியும்.
இந்தப் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை செயலர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு நீதிபதி தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications