அண்ணா பல்கலை.யில் நானோ டெக்னாலஜிவகுப்பெடுக்கப் போகும் கலாம்
சென்னை:குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசிரியராக திரும்பி வரவுள்ள அப்துல் கலாமுக்காக அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
ஓய்வுக்குப் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பணியாற்றவுள்ளார் கலாம். இதுதவிர திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு சில கல்வி நிறுவனங்களிலும் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 25 அல்லது 26ம் தேதியன்று சென்னைக்கு வருகிறார் கலாம். சென்னைக்கு வரும் அவர் நேராக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அன்றே தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
![]() |
கலாமை வரவேற்க அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி மற்றும் வானவியலில் பாடங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளார் கலாம். இதனால் இத்துறை மாணவ, மாணவியர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மறுபடியும் குடியரசுத் தலைவராக நீடிப்பதற்குப் பதில் ஆசிரியராக தொடருவது என்று கலாம் எடுத்த முடிவை இங்குள்ள மாணவ, மாணவியர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
குறிப்பாக நானோ டெக்னாலஜி பிரிவு மாணவ, மாணவர்கள், கலாம்தான் தங்களது துறைக்கு பாடம் எடுக்க சரியான ஆசிரியர் என்று பெருமையாக கூறுகின்றனர்.
இதேபோல கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்களும் கலாமிடம் பாடம் கற்க பெருத்த ஆவலுடன் உள்ளனர்.
மொத்தத்தில் தங்களது பிரியமான ஆசிரியரை வரவேற்க அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், பள்ளிக்கூட மாணவர்களின் ஆர்வத்துடன் படு உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதியாகும் முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கலாம், அங்கு இரு பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு கைட் ஆக இருந்தார். ஜனாதிபதி ஆன பிறகும் அவர்களுக்கு கைட் ஆக இருந்து புராஜெக்டை சமர்பிக்கும் வரை உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாமின் அடுத்த புத்தகம்:
இதற்கிடையே கலாம் தனது அடுத்த படைப்பான மலர்ச்சி அடையவே மனிதன் பிறக்கிறான் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ராஷ்டிரபதி பவன் வரை வந்த தன்னுடைய வாழ்க்கை பாதையை கலாம் இதில் மிக எளிதாகக் கூறியுள்ளாராம்.
இதன் மூலம் மக்கள், தாங்கள் வாழ்வதற்கான நோக்கம் மற்றும் லட்சியம் ஆகியவற்றை அடைவது குறித்தும் இந்த புத்தகத்தில் கலாம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலாமின் முந்தைய படைப்புகளான அக்னி சிறகுகள், ஆத்ம வழிகாட்டி, என் கனவு இந்தியா, விஞ்ஞானி முதல் ஜனாதிபதி வரை, இந்தியா 2020 போன்ற நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தனது விளக்கவுரையுடன் கூடிய திருக்குறளையும் கலாம் வெளியிடவுள்ளார்.













Click it and Unblock the Notifications