பிரதீபா வெற்றி-கருணாநிதிக்கு அமைச்சரவை பாராட்டு
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் அமோக வெற்றி பெற்றதற்கு முதல்வர் கருணாநிதி வகுத்துத் தந்த வியூகமே காரணம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதீபா பாட்டீல் வெற்றிக்காக வியூகம் வகுத்துக் கொடுத்து அவரது வெற்றிக்கு துணை நின்றதற்காக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஒரு பெண்மணியை தேர்ந்தெடுக்க தொடக்கத்திலிருந்தே முழு முதல் காரணமாக இருந்து, அதற்காக டெல்லி வரை சென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடதுசாரித் தலைவர்களோடும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி,
மகளிர் வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவளித்து அவருக்கு ஆதரவாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்திலே மகளிரே கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்றையும் நடத்தி அதற்கு பிரதீபாவை அழைத்து வந்ததோடு,
இன்று மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், பிரதீபா மகத்தான வெற்றி பெற்றதற்கு காரண கர்த்தாக்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்திடும் முதல்வர் கருணாநிதிக்கு இந்த அமைச்சரவை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கேபிள் டிவி கட்டமைப்பு தொடர்பான முக்கிய விவாதம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதுதவிர ரத்து செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications