யுஎஸ்: சட்டவிரோத குடியேறிகளுக்கு ஐ.டி கார்ட்!
நியூ ஹேவன் (கனக்டிகட்):அமெரிக்காவிலேயே முதல் முறையாக, கனக்டிகட் மாநிலத்திற்குட்பட்ட நியூ ஹேவன் நகரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இருந்தாலும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவிலேயே முதல் முறையாக சட்டவிரோத குடியேறிகளுக்கு, கனக்டிகட் மாநிலத்தில் உள்ள நியூ ஹேவன் நகர நிர்வாகம், அடையாள அட்டைத் திட்டத்தை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது.
இந்த அடையாள அட்டைகள் சட்டவிரோத குடியேறிகள், வங்கிக் கணக்குகளைத் தொடங்க முடியும், நூலகங்களுக்கும் சென்று பயன்பெற முடியும். பிற வசதிகளையும் அனுபவிக்க முடியும்.
இந்த அடையாள அட்டைத் திட்டம், சட்டவிரோத குடியேறிகளின் வாழ்க்கைக்கு புதிய கெளரவத்தைக் கொடுக்கும், அவர்களின் வேலைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று இந்தத் திட்டத்தை வரவேற்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இந்த்த திட்டத்தால் மேலும் பலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டு விடும் என இதன் எதிர்ப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்தத் திட்டத்திற்கு நியூ ஹேவன் நகராட்சியில் 25-1 என்ற கணக்கில் ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து நாளை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளவரான கிகா மாட்டோஸ் கூறுகையில்,
அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளுக்கு தற்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. திருடர்கள், இவர்களைக் குறி வைத்து அவர்களின் பொருட்களையும், பணத்தையும், உடமைகளையும் திருடிச் செல்வது அதிக அளவில் நடக்கிறது.
வங்கிக் கணக்கு தொடங்க முடியாத நிலை இருப்பதால் இதுபோன்ற சட்டவிரோத குடிேயறிகள் கையில் எப்போதும் பணத்துடனேயே செல்வதால் அவர்கள் திருடர்களின் புதையலாக உள்ளனர்.
முறையான அடையாள அட்டை இல்லாததால்தான் அவர்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை. அதை கருத்தில் கொண்டுதான் இந்த அடையாள அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டைத் திட்டத்திற்கு 2 வங்கிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த அடையாள அட்டையை ஏற்றுக் கொண்டு வங்கிக் கணக்கு தொங்க அனுமதிப்போம் என்று அவை கூறியுள்ளன. நியூ ஹேவன் நகர குடிமக்களுக்குக் கிடைக்கும் அதே சலுகைகள் சட்டவிரோத குடியேறிகளுக்கும் வழங்கப்படும் என அவை தெரிவித்துள்ளன என்றார்.
நியூ ஹேவன் நகரில் மட்டும் 3,000 முதல் 5,000 சட்டவிரோத குடியேறிகள் வசிப்பதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ, ஈகுவடார், குவாட்டமாலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். நியூ ஹேவன் நகரின் மொத்த மக்கள் தொகை 1. 24 லட்சமாகும்.
நியூ ஹேவன் நகரில் உள்ள புகழ் பெற்ற ஏல் சட்டப் பல்கலைக்கழகம்தான் இந்த அடையாள அட்டை திட்டத்திற்கான யோசனையை முதலில் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தத் திட்டத்தை எதிர்த்து தெற்கு கனக்டிகட் குடிமக்கள் சங்கம் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. கனக்டிகட் மாநிலத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என அவை அச்சம் தெரிவித்துள்ளன.
இந்த்த திட்டத்தை கேலி செய்து, வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான அமைப்பு ஒரு அழைப்பு விடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் பிற பகுதிகளில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள், நியூ ஹேவன் நகருக்கு இடம் பெயர்ந்து அந்த நகரின் அடையாள அட்டைத் திட்டத்ைத பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக் ெகாள்கிறோம்.
நீங்கள் மட்டும் வராதீர்கள். உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் விரைந்து வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டு அனுபவியுங்கள் என்று அந்த நக்கல் அழைப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications