அண்ணா பல்கலை.யில் கரண்ட் கட்வராண்டாவில் தூங்க விரும்பிய கலாம்!
சென்னை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின் வெட்டு ஏற்பட்டதால், நேற்று இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையில் தங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
நேற்று இரவு இந்திய விமானப்படையின் விமானம் மூலம் சென்னை வந்தார் கலாம்.
அவருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. இதில் நிதியமைச்சர் க.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் திரிபாதி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலாமை வரவேற்றனர்.
பின்னர் நேராக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கலாம் கூறுகையில் தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, இப்போது தமிழகத்திற்கேத் திரும்பி வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் ஆசிரியர் பணியைத் தொடரவுள்ளேன் என்றார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் புழுக்கத்தில் நெளிந்த கலாம், விருந்தினர் மாளிகை வளாக வராண்டாவில் காற்றாட படுத்துத் தூங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கலாமை அருகில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் கலாம் அங்குதான் தங்கியிருந்தார்.
இரவு 11 மணிக்கு கலாம் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 10.30 மணிக்குத்தான் அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார்.
இன்று பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கலாம் சந்தித்தார்.
பிற்பகலில் முதுநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்துப் பேசினார். மாலை 5 மணிக்கு இளநிலை பொறியியல் மாணவர்களை சந்தித்தார்.
அடுத்த வாரம் முதல் தனத ஆசிரயர் பணியைத் தொடங்குகிறார்.
அப்துல் கலாம் கெளரவப் பேராசிரியராக பணியாற்றுவற்காக சம்பளம் வாங்கப் போவதில்லையாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications