அதிமுக கறுப்பு சட்டை: மதிமுக நாமம், முக்காடு
திருப்பூர்:திருப்பூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கறுப்பு சட்டையுடனும், மதிமுகவினர் முக்காடு போட்டும் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
திருப்பூர் நகராட்சியில் பொய் கணக்கு எழுதி கோடிகணக்கான பணம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக நகராட்சி பொறியாளர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நகர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஊழலை கண்டித்து கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
மதிமுக உறுப்பினர்கள், பொது மக்கள் பணத்திற்கு பட்டை நாமம் என எழுதி கழுத்தில் மாட்டிக் கொண்டும், தலையில் முக்காடு போட்டும் வந்திருந்தனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர்கள்,
திருப்பூர் நகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும்.
முக்கியமாக இந்த ஊழலில் கவுன்சிலர்கள் யாருக்கும் தொடர்புள்ளதாக என்பதை விசாரிக்க வேண்டும். ஊழலில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதை கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும். தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவது தான் சரி என்றனர்.
இதையடுத்து அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தனர்.












Click it and Unblock the Notifications