அமெரிக்காவில் 2 செய்தி நிறுவனஹெலிகாப்டர்கள் மோதல்- 4 பேர் பலி
அரிசோனா:அமெரிக்காவில் போலீசார் ஒரு காரை விரட்டிச் சென்றதை படம் பிடிக்கச் சென்ற இரண்டு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. இதில் 4 பேர் பலியாயினர்.
அரிசோனாவில் பாலைவனப் பகுதியில் பீனிக்ஸ் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
ஒரு நபரைத் தாக்கிவிட்டு காரைத் திருடிச் சென்ற நபரை போலீசாரின் கார்கள் விரட்டிச் சென்றன. காரை ஓட்டியவன் படு வேகத்தில் ஓட்டியதால் இந்த சேஸ் நெடு நேரம் நீடித்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஏபிசி செய்தி நிறுவனம் தனது வீடியோகிராபரையும் நிருபர்-கம்-பைலட்டையும் ஹெலிகாப்டரில் அனுப்பியது.
அதே போல சேனல் 3 நிறுவனத்தின் இன்னொரு ஹெலிகாப்டரும் இந்த சேஸை படம் பிடிக்க வந்தது.
இரு ஹெலிகாப்டர்களும் காரை போலீசாரின் வாகனங்கள் விரட்டிச் செல்வதை படம் பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களைத் தொடர்ந்து போலீசாரின் ஹெலிகாப்டரும் வந்தது.
அப்போது இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களும் திடீரென வானில் மோதிக் கொண்டன.
இரு ஹெலிகாப்டர்களும் வெடித்துச் சிதறி கீழே விழுந்தன. அதிலிருந்த 4 பேரும் பலியாகினர்.
காரை திருடிச் சென்றவனை பின்னர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.