விஜயகாந்த் பட பாணியில் செல்போன்வெளிச்சத்தில் நடந்த ஆபரேஷன்!
பியூனஸ் அயர்ஸ்:அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரில், மருத்துவமனையில் திடீரென மின்சாரம் கட் ஆகி விட்டதால் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.
சமீபத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் சபரி. இப்படத்தில் செல்போன் விளக்கொளியில், அறுவைச் சிகிச்சை நடப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று பலரும் அந்தக் காட்சியை விமர்சித்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.
மத்திய அர்ஜென்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் வில்லா மெர்சிடீஸ். இந்த நகரில் உள்ள பாலிகிளினிக்கோ ஜூன் டி பெரோன் என்ற மருத்துவமனையில், லியானோர்டோ மாலினா (29) என்ற இளைஞருக்கு கடந்த 21ம் தேதி குடலிறக்க (அப்பெண்டிக்ஸ்) அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
முக்கியமான கட்டத்தில் அறுவைச் சிகிச்சை இருந்தபோது திடீரென கரண்ட் போய் விட்டது. இதையடுத்து ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். ஆனால் அதுவும் இயங்கவில்லை.
இதனால் டாக்டர்கள் குழம்பி விட்டனர். அப்போது நோயாளியின் உறவினர் ஒருவருக்கு திடீரென ஒரு ஐடியா வந்தது. மருத்துவமனையில் இருந்தவர்களிடமிருந்து செல்போன்களை சேகரித்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்.
அத்தனை செல்போன்களையும் ஆன் செய்தார். இதனால் கொஞ்சம் போல வெளிச்சம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி மிச்ச சொச்ச அறுவைச் சிகிச்சையையும் டாக்டர்கள் செய்து முடித்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் செல்போன் வெளிச்சம் இருந்ததாம். இதனால் பிரச்சினையின்றி டாக்டர்கள் அறுவைச் சிகிச்சையை முடித்துள்ளனர்.
சுமார் 20 நிமிடங்கள் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்ததாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications