தீண்டாமையை ஒழிக்க மக்கள் இயக்கமே சரி: பழ.நெடுமாறன்
கடையநல்லூர்:கடையநல்லூர் மங்கலாபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களின் ஜீவதார தொழிலான விவசாய தொழிலுக்கு கேடு விளைவுக்கும் மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வீரன் சுந்தரலிங்கனார் தியாகத்தை இளைய தலைமுறையினர் உணரும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் பேசுகையில்,
தமிழகத்தில் தமிழர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பூர்வ குடி மக்களான உழவு தொழில் செய்யும் மக்கள் வாழ வழியில்லாமல் தவிக்கிறார்கள். இங்குள்ள விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
பிறப்பால் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தக்கூடிய முறை இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. உலக நாடுகளில் இதுபோன்ற ஒரு செயலை வேறு எங்கும் பார்க்க முடியாது. 1955-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த 2 சட்டங்களும் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
இதை செயல்படுத்த வேண்டிய நீதித்துறையும், நிர்வாக துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளன. எனவே மிகப்பெரிய மக்கள் இயக்கம் மூலம் தான் நமது உரிமைகளைப் பெற முடியும் என்றார்.
வல்லநாடு சாது சிவா சுவாமிகள் பேசுகையில்,
தேவர் இன மக்களும், தேவேந்திர குல மக்களும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே முத்துராமலிங்க தேவரும், இமானுவேலும் சமுதாய மேம்பாட்டிற்கு பாடுபட்டது போல நாம் இனிமேல் ஒற்றுமையாக பாடுபட்டு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சுய நலத்திற்காக பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு நம்மை பிரித்தனர். இனி நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார்.
மாநாட்டில் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.