நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அடிதடி
செங்கோட்டை:செங்கோட்டை நகராட்சிக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலரை, திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமும், அவசரக் கூட்டமும் தலைவர் ரகீம் தலைமையில் 30-ந் தேதி காலை நடந்தது.
கூட்டம் தொடங்கிய உடன் எழுந்த திமுக கவுன்சிலர்கள் கல்யாணி, பாஞ்ச் பீர், சேக் அப்துல் காதர் ஆகியோர்,
பேருந்து நிலையத்தின் உட் பகுதியில் கட்டப்பட்ட கடையை அப்புறப்படுத்திட ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந் நிலையில் கடைகள் மீண்டும் ஏலம் விடப்பட்டுள்ளன. இது தவறான செயல் என்று கூறினர்.
இதைக் கேட்டதும் நகராட்சித் தலைவர் ரகீம் ஆத்திரமடைந்தார். திமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
வாக்குவாதம் முற்றவே நகராட்சித் தலைவர் ரகீம், திமுக கவுன்சிலர் கல்யாணியை அசிங்கமாக பேசியபடி தாக்கப் பாய்ந்தார்.
அவரைத் தடுக்க திமுக கவுன்சிலர் சேக் அப்துல் காதர் ஓடி வந்தார். ஆனால் அவரையும் அடிக்க முயன்றார் ரகீம். அதில் காதர் கீழே விழுந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவே தலைவரை பிற கவுன்சிலர்கள் அவரது அறைக்கு அழைத்து சென்று விட்டனர்.
திமுக சேர்மனே, திமுக கவுன்சிலர்களை தாக்க முயன்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications