துப்பாக்கி சூட்டில் கம்யூ. தொண்டர்கள் பலி:ஆந்திராவில் பிரதமர்: நாயுடு உண்ணாவிரதம்
ஹைதராபாத்:ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 8 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொல்லப்பட்ட நிலையில், நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங் ஹைதராபாத் வந்தார்.
கம்மம் மாவட்டத்தில் அப்பாவி பொது மக்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பலியாயினர்.
இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டியை நீக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பிரச்சனை பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதையடுத்து இடதுசாரிகளை அமைதிப்படுத்தும் வகையில் பிரதமர் நேற்றிரவு ஆந்திரா வந்தார்.
முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பலியானவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் போய்ச் சேர வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டார்.
இன்று ஹைதராபாத்தில் நடக்கும் ஆந்திர வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்:
பிரதமர் ஹைதாரபாத்தில் உள்ள நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தை பிரதமர் பார்வையிட வேண்டும், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் நாயுடு ஈடுபட்டார்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு தலைமையில் பல்வேறு கட்சியினரும் பிரதமர் பங்கேற்ற கூட்டம் நடந்த ஜூப்ளி ஹாலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications