போலீஸ் மிரட்டல்- பெண் வக்கீல் மாயம்!கண்டுபிடிக்க கோரி சகோதரி வழக்கு
சென்னை:என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக போலீஸாரால் மிரட்டப்பட்ட பெண் வக்கீலைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுக்கமாறு போலீஸுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மூத்த சகோதரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா.
கடந்த மாதம் 25ம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்காக கவிதா சென்னை வந்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை. ஊருக்கும் திரும்பவில்லை. சென்னையிலும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
இதையடுத்து அவரது சகோதரி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய போலீஸார் மீது கவிதா பல்வேறு புகார்களைக் கூறி வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கும், எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டல்கள் வந்ததால் தனக்குப் பாதுகாப்பு கோரி கடந்த 2005ம் ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் கவிதா மனு தாக்கல் செய்தார்.
அதன்படி அவருக்கு பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கவிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
இந் நிலையில்தான் கவிதா காணாமல் போயுள்ளார் என்று தனது மனுவில் கூறியிருந்தார் அமுதா.
அமுதாவின் மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications