ஜீவஜோதி கொலை முயற்சி வழக்கு;சரவண பவன் ராஜகோபால் விடுதலை!
நாகப்பட்டனம்:ஜீவஜோதியைக் கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் ராஜகோபால். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார்.
இந்த நிலையில், 2003ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தனது வழக்கறிஞர் மற்றும் அடியாட்களுடன் நாகை மாவட்டம் தோத்தாக்குடி கிராமத்தில் உள்ள ஜீவஜோதி வீட்டுக்குச் சென்ற அவர் ஜீவஜோதியைக் கொலை செய்ய முயற்சித்ததாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதியே புகார் கொடுத்தார்.
இதுதொடர்பான வழக்கு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜகோபால் அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் கணேசன், சீனி நாகராஜன், கார்த்திகேயன், சுப்ரமணியன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜீவஜோதி, அவரது தந்தை ராமசாமி, தாயார் தவமணி, தம்பி ராம்குமார் உள்ளிட்ட 8 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஜீவஜோதி உள்ளிட்ட அவரது தரப்பு சாட்சிகள் அனைவரும் என்ன நடந்தது என்றே தெரியாது, எல்லாவற்றையும் மறந்து விட்டோம் என்று பிறழ் சாட்சியம் அளித்தனர்.
மேலும் புகார் கொடுத்த ஜீவஜோதியே என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் புகாரே கொடுக்கவில்லை என்று பல்டி அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நீதிபதி சேதுமாதவன் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.
விடுதலையான பின்னர் சந்தோஷ முகத்துடன் வெளியே வந்த ராஜகோபால், எல்லாம் முருகனின் அருள் என்று கைகளை கூப்பியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ராஜகோபால் மீதான பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications