மதானி, 7 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை- விடுதலை?
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ள நீதிபதி உத்தராபதி அவர்களை விடுதலை செய்வது குறித்து உடனடியாக உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதலையாவதில் குழப்பம் நிலவுகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று குற்றவாளிகள் யார், யார் என்று நீதிபதி உத்தராபதி தீர்ப்புவழங்கினார்.
அதில் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவுத்தவுடன், அவரை உடனடியாக விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என அவரது வழக்கறிஞர் அக்பர் அலி கோரினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் கூறினேன். விடுதலை செய்வதாக கூறவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதியுடன் மதானியின் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், மதானி நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிரபராதியை இத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தது ஏன், இப்போது உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
அப்படியானால் மதானிக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யுங்ள் என்று நீதிபதி கூறினார்.
இதை ஏற்க மறுத்த வக்கீல்கள், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றனர்.
இதையடுத்து பிற்பகலில் இதுகுறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
ஆனால் மாலை வரை எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை.
மதானி மீது குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த மதானியின் ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
மதானி கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அரசுத் தரப்பில் மூன்று டைரிகள், கடிதங்கள், லெட்டர் பேடு, புத்தகம் ஆகியவற்றை முக்கிய ஆதாரங்களாக சமர்ப்பித்திருந்தனர்.
மேலும் கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட பின்னர் மதக் கலவரம் ஏற்பட்ட நாளில், கேரளாவிலிருந்து சென்னையில் இருந்த அல் உம்மா தலைவர் பாஷாவிடம் பலமுறை மதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சமர்ப்பித்திருந்தது.
மதானியின் டைரியில், ஷா மற்றும் முகம்மது அன்சாரியின் தொலை பேசி எண்கள் இடம் பெற்றிருந்ததையும் ஆதாராமாக போலீஸ் தரப்பு காட்டியிருந்தது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதானி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றங்களை அணுகினார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
கேரள அரசும் மதானியை விடுவிக்குமாறு தொடர்ந்து தமிழக அரசிடம் கோரி வந்தது. இந்த நிலையில் 9 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் மதானிக்கு விடுதலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கொண்டாட்டம்:
முன்னதாக அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்ததையடுத்து கேரள மாநிலம், பாலக்காட்டில் மதானியின் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications