தேயிலை விலை: கோத்தகிரியில் அதிமுக போராட்டம்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவார். கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடையும்.
அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும். அதற்கு கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குவார். நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகிப்பார்.
இந்தப் போராட்டத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்தப் பேரணியை பிரமாண்ட பேரணியாக மாற்ற வேண்டும்.
தேயிலைக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கில் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தேயிலைக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது. மேலும், வாட் வரியையும் விதித்தது. இதனால் தேயிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இதைக் கண்டித்து அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.
தேயிலை உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யுமாறு மத்திய , மாநில அரசுகளைக் கோரியும் இந்தப் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications