சிறையில் சஞ்சய் தத்துக்கு நெஞ்சு வலி
புனே:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவருக்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவரை மும்பை சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி புனே அருகில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்றினர்.
அங்கு அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் தத் கூறினார். இதையடுத்து அவருக்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவரை சசூன் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு வந்தது முதலே சஞ்சய் தத் தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறாராம். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சு வலி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருக்கு ஜாமீன் கோரி அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.