பூ கொடுத்தால் பணம் தரும் ஏடிஎம் சாமியார்!
லக்னோ: பூ கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு அப்படியே 500 ரூபாய் தாளாக மாற்றித் தரும் அதிசய சாமியாரால் லக்னோவில் ஒரே களேபரமாக இருக்கிறது.
உ.பி. தலைநகர் லக்னோ அருகில் உள்ள ஹரிபுர் காரியா என்ற இடத்தில், ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் வந்தார். தனது பெயர் கான்சா பாபா என்று அவர் கூறிக் கொண்டார்.
வட மாநிலங்களில்தான் தடுக்கி விழுந்தால் சாமியாராச்சே. எனவே இந்த சாமியாரை ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், அவரையும் மதித்து சிலர் ஆசிர்வாதம் வாங்கினார். அப்போது அவர்களிடம் பூ கொண்டு வருமாறு சாமியார் கூறினார். அவர்களும் பூ கொண்டு வந்து சாமியாரிடம் கொடுத்தனர்.
அந்தப் பூவை வாங்கிய சாமியார் பின்னர் அதை பக்தர்களிடம் திருப்பிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம், அவர் பூவாக கொடுத்தது பக்தர்கள் கைக்கு வந்தபோது பணமாக இருந்ததாம். உடனடியாக பிரபலமானார் அந்த ஏடிஎம் சாமியார்.
இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி, இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட பக்தர்கள் வரிசை கையில் பூக்களுடன் காத்துக் கிடக்கிறது. இப்போது 500 ரூபாய் சாமியாரைப் பற்றித்தான் அந்த கிராமம் முழுவதும் பேச்சாம்.
சாமியார் எப்படி பூவை பணமாக மாற்றுகிறார் என எவரும் கேட்பதில்லை. பூவைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு பறப்பதில்தான் பக்தர்கள் படு ஆர்வமாக உள்ளனர். பூ எப்படி பணமாகிறது என்பதை அறிய அவர்கள் விரும்பவில்லை.
அதேபோல பணத்தை வாங்கியவுடன் அதை அப்படியே செலவழித்து விடுகிறார்களாம். ஏன் என்றால் மந்திரத்தால் வரும் பணமாச்சே, மறுபடியும் மாயமாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம்தான்.
ஆனால் சாமியார் ஏதோ கோல்மால் செய்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தவ வேண்டும் என அந்த ஊரைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர், ரோஷன்லால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முன்பு இப்படி ஒரு வினோத சாமியார், நோயை குணப்படுத்துகிறேன் என்று பக்தர்களைப் பிரம்பால் அடித்துள்ளார். அப்படி அடித்தபோது ஒரு சிறுவன் இறந்து விட்டான். இதேபோல, இன்னொரு சாமியார், தண்ணீரில் விபூதியைக் கலந்து கொடுத்து ஒரு பெண்ணைக் காணாமல் போகச் செய்து விட்டார் (அதாவது கூட்டிக் கொண்டு போய் விட்டார்). அந்தப் பெண் என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.
எனவே இந்த சாமியார் விவகாரத்திலும் எந்தக் குழப்பமும் நடந்து விடக் கூடாது, அதற்கு முன்பு சாமியார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறார் ரோஷன்லால்.
ரோஷன்லாலின் புகாரைத் தொடர்ந்து ஏடிஎம் சாமியாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு போலீஸாரிடம் சாமியார் கூறுகையில், நான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோஷப்படுத்த கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.
என்னை எப்படி வேணும்னாலும் சோதனை போட்டுக் கொள்ளுங்கள். நான் இருக்கும் இந்த கிராமத்தைச் சுற்றி ஏடிஎம்மோ அல்லது வங்கியோ கிடையாது. ஏழை மக்களுக்கு உதவி செய்தால் அது குற்றமா? என்று கூறியுள்ளார் சாமியார்.
அத்தோடு நில்லாமல், விசாரணை நடத்த வந்த போலீஸாரிடமே பூவைக் கேட்டு வாங்கி 500 ரூபாய் நோட்டாக மாற்றி கையில் கொடுத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பினாராம்.
இதைப் பார்த்த போலீஸார் இவரிடம் என்ன பேசுவது என்றே தெரியாமல் திரும்பி விட்டனராம்.
கான்சா பாபாவுக்கு அந்த ஊர் மக்கள் ஏடிஎம் பாபா என்ற பெயரை வைத்துள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களையும் சேர்ந்தவர்கள் எங்கள் ஊரிலும் ஒரு பிரான்ச் ஓபண் பண்ணுங்க என்று சாமியாரிடம் அன்பாக கோரிக்கை வைத்துள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications