ராமர் பாலம்-அமெரிக்கா உண்மையை மறைத்துவிட்டது: வி.எச்.பி
சென்னை:சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஆகஸ்ட் 26ம் தேதி, 1 லட்சம் சாதுக்கள், பக்தர்கள் கலந்து கொள்ளும் ராமேஸ்வரம் சலோ போராட்டம் நடத்தப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வி.எச்.பி. அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராமேஸ்வரத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்தும் 1 லட்சம் சாதுக்கள், ராம பக்தர்கள் கலந்து கொள்வர்.
ராமர் பாலத்தை அழிக்க விடாமல் காப்போம் என இந்த ராமேஸ்வரம் சலோ போராட்டத்தில் பங்கேற்போர் உறுதி எடுத்துக் கொள்வர்.
இதுதவிர ஆகஸ்ட் 12ம் தேதி நாடு முழுவதும் 200 இடங்களில் ஒரு நாள் உண்ணாவிதரப் போராட்டமும் நடத்தப்படும். சென்னையில், பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் தலைமையில் போராட்டம் நடைபெறும்.
ராம பக்தர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் கருத்துக்களையும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சேது சமுத்திரத் திட்ட அதிகாரிகள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
20 சதவீத ராமர் பாலத்தின் பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பகுதிகளையாவது நாம் காத்தாக வேண்டும். எனவே இந்தத் திட்டத்தை அப்படியே நிறுத்த வேண்டும்.
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்ற உண்மையை மத்திய அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சேது சமுத்திரத் திட்டக் கழக தலைவர் ரகுபதி தனது சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மறைத்து விட்டார்.
ராமர் பாலத்தை உடைப்பதால் அப்பகுதியில் உள்ள தோரியம் படிவுகள் வீணாகும் அபாயம் உள்ளது.
நாம் வல்லரசாகி விடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செய்யும் சதித் திட்டமே இது. ராமர் பாலம் குறித்த உண்மையை வேண்டும் என்றே அமெரிக்கா மறைத்து விட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications