ராமநாதபுரம்-திமுக பெண் கவுன்சிலரை குண்டு வீசிகொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது-பதற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச முயற்சி நடந்தது. இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தான் சிவகங்கையில் காரில் குண்டு வைத்து நகராட்சித் தலைவர் கொல்லப்பட்டார். இந் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் 7வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருப்பவர் செல்வி. இவரும் அவரது கணவரும், சிலரும் வீட்டின் முன்பு நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் வெடிகுண்டை செல்வி மீது வீச முயன்றுள்ளனர்.
இதைக்கண்ட அப் பகுதியினர் வாலிபர்களை விரட்டிச் சென்று பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கது பெயர் சிவக்குமார், கோட்டை என்று தெரிய வந்தது.
சமீபத்தில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார் செல்வி. அந்தப் பிரச்சனையில் தான் செல்வியைக் கொல்ல வெடிகுண்டு வீச திட்டமிடப்பட்டதாக போலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. போலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகளில் காண்ட்ராக்ட், கமிஷன் அடிப்பதில் சகல கட்சியினருக்கும் இடையே ஏற்படும் மோதல் (பல சமயங்களில் உள் கட்சியிலேயே மோதல்) கொலை வரை போகிறது. இந்த மோதலுக்கு முழுக்க முழுக்க பணத்தை பங்கிடுவதில் ஏற்படும் சண்டையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications