ஜெ. கீழ்த்தரமான கிணற்றுத் தவளை: கருணாநிதி
சென்னைதன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறார் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா குறித்து முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் பாணியில் வெளியிட்ட அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
அதில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் கவலையின்றி இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இடதுசாரித் தலைவர்களுடன் நான் தொடர்ந்து தொடர்பு கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினை வெடித்தது முதலே, நான் தொடர்ந்து தொலைபேசியில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சோனியா காந்தி, இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறேன்.
ஆனால் இது ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இதுபோன்ற பிரச்சினைகளில் விளம்பரம் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை. இதை ஜெயலலிதாவுக்கும், அவரது சிந்தனையைப் பின்பற்றுவோருக்கும் தெரிவிக்கவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களான என். வரதராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசித்துள்ளேன்.
இந்த விவகாரத்தில் பிரதமரை மிகவும் இழிவாக விமர்சித்துள்ளார் ஜெயலலிதா. தனது மகள், மருமகன் ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதால்தான் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த பிரதமர் துடிக்கிறார் என்று கூறியிருப்பது எந்த அளவுக்கு ஜெயலலிதா கீழ்த்தரமாக போவார் என்பதையே விளக்குவதாக உள்ளது.
பிரதமர் குறித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறிய கருத்தை விட மிகக் கடுமையானது ஜெயலலிதாவின் பேச்சு என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications