11 ஆதிவாசி பெண்கள் கற்பழிப்பு-ஆந்திர போலீஸ் அட்டகாசம்
நகரி:ஆந்திர மாநிலத்தில் மலைப் பகுதிகளில் நக்சல்கள் வேட்டைக்கு சென்ற போலீசார் ஆதிவாசி பெண்கள் 11 பேரை கற்பழித்துள்ளனர். அந்த போலீசார் மீது நடவடிக்கைக கோரி போராட்டம் வலுத்து வருகிறது.
விசாகப்பட்டினத்தில் வாசப்பள்ளி என்னும் கிராமத்தில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மலைப் பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் நுழைந்த போலீஸ் படை அங்குள்ள ஆண்கள், வயதானவர்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரையும் ஊரைவிட்டு துரத்தியுள்ளனர்.
ஆனால் 20 முதல் 40 வயதுள்ள 11 ஆதிவாசி பெண்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் வெளியேறியபின் அந்த ஆதிவாசிப் பெண்களை பாலியஸ் பலாத்காரம் செய்துள்ளனர் காக்கிகள்.
போலீசார் சென்ற பின் ஊர் மக்கள் கிராமத்திற்கு திரும்பினர். அப்போது போலீசார் தங்களுக்குச் செய்த கொடுமையை அந்தப் பெண்கள் சொல்லி கதறியழுதுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலெக்டர் யோகேஷ்குமாரை சந்தித்து புகார் அளித்தனர். அதில்,
எங்கள் ஊரைச் சேர்ந்த 11 பெண்களை கற்பழித்து அவர்கள் வாழ்வை சீரழித்த போலீசாரை வேலையை விட்டு நீக்கி, அவர்கள் மீது சட்டரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் எஸ்பி அகுல் அபர்வால் கூறுகையில்,
ஆந்திர போலீசார் நக்சல் வேட்டையில் அபாரமாக செயல்படுகிறார்கள். அவர்களின் தேடுதல் வேட்டையை பிடிக்காத வாசபள்ளி கிராம மக்கள் வேண்டுமென்றே புகார் கொடுத்துள்ளார்கள்.
இருப்பினும் அவர்கள் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications