லாரி ஏற்றி ஏட்டு கொலை-டிரைவர் கைது
வேலூர்:வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்ட தலைமைக் காவலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். லாரி டிரைவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெல்லக்கல்நத்தம் என்ற இடத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், திருப்பத்தூர் ஏட்டு கருணாகரன் மற்றும் தாலுகா ஏட்டு மாரிமுத்து ஆகிய மூவரும் நேற்றிரவு வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி கார்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பெரிய டிரக் வந்து கொண்டிருந்தது. போலீசார் 3 பேரும், அந்த லாரியை சோதனை செய்வதற்காக சிகப்பு விளக்கு மற்றும் டார்ச் லைட் மூலம் நிறுத்த சைகை காட்டினர்.
ஆனால் லாரி டிரைவர் நிறுத்தாமல், போலீசார் மீது மோதும் நிலையில் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் எஸ்ஐ ராஜகோபாலும், ஏட்டு மாரிமுத்துவும் ரோட்டை விட்டு தாவியதால் உயிர் தப்பினர்.
ஆனால் மற்றொரு தலைமைக் காவலர் கருணாகரன் மீது லாரி பயங்கரமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே எஸ்.ஐ ராஜகோபால் அந்த லாரியை ஜீப்பில் விரட்டி சென்று மடக்கினார். டிரைவர் ஜெருமந்தராஜை கைது செய்தார்.
லாரியில் இருந்த இன்னொரு டிரைவர் மற்றும் கிளீனரும் ஓடிவிட்டனர். இவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதில் பலியான ஏட்டு கருணாகரன் கேரள மாநிலம் திருவாரியை சேர்ந்தவர். இவருக்கு வனஜா(46) என்ற மனைவியும், ஹரிகுமார், உன்னி கிருஷ்ணன் என்ற மகன்களும் இருக்கிறார்கள். கருணாகரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தப்பிஓடிய லாரி கிளீனர் மற்றும் இன்னொரு டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications