கற்பழித்துக் கொல்லப்பட்ட மாணவிகுழந்தையுடன் திரும்பினார் - மதுரையில் பரபரப்பு!
மதுரை:கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 6ம் வகுப்பு மாணவி, கையில் குழந்தையுடன் கோர்ட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி இவர் காணாமல் போனார்.
இந் நிலையில் சுஜாதா படித்து வந்த அதே பள்ளியில் 11ம் வகுப்புப் படித்து வந்த கார்மேகம் என்பவர்தான் தனது பெற்றோருடன் சேர்ந்து சுஜாதாவைக் கடத்திச் சென்று விட்டதாக சுஜாதாவின் தந்தை சேவுகன் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சுஜாதா உயிருடன் இல்லை என்று தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து கார்மேகத்தை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் கார்மேகத்திடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறிய போலீஸார் அவரையும் கைது செய்தனர்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்ததாகக் கூறி ஒரு வாக்குமூலத்தை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில்,
கார்மேகமும், நானும் சேர்ந்து சுஜாதாவைக் கடத்தினோம். பின்னர் நான் கார்மேகத்தை ஏமாற்றி விட்டு சுஜாதாவை கடத்தினேன். ஒரு மறைவான இடத்திற்கு அவரைக் கொண்டு சென்று கற்பழித்தேன். பிறகு அவரைக் கொலை செய்தேன். உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொளுத்தி விட்டேன்.
பிணத்தை தீவைத்து எரிப்பதற்கு பழனி என்பவர் உதவினார் என்று கிருஷ்ணமூர்த்தி கூறியதாக போலீசார் தெரிவித்திருந்தனர்
இதைத் தொடர்ந்து பழனியும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த 2002ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டைமாவட்டம் மணல்மேல்குடியில் சுஜாதா உயிருடன் இருப்பதாக கார்மேகத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். வெல்லூர் என்ற கிராமத்தில், சுஜாதா இருப்பது தெரிய வந்தது. அவருக்கு இரண்டரை வயதில் செல்வகணபதி என்ற பெயரில் குழந்தை இருப்பதும் அறிந்து போலீஸார் திடுக்கிட்டனர்.
கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, குழந்தையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுஜாதாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கு சுஜாதா அளித்த வாக்குமூலத்தில், என்னை யாரும் கடத்தவில்லை. எனக்கும் கணேசன் என்பவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. எங்களுக்கு இரண்டரை வயதில் குழந்தையும் உள்ளது. நான் எனது பெற்றோருடன் வசிக்க விரும்புகிறேன் என்றார்.
இதையடுத்து அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தது நீதிமன்றம்.
போலீசாரின் அடி, உதை தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தியும் பழனியும் கடத்தல்-கொலை என்று போலீஸ் சொன்னபடி பொய்யாக வாக்குமூலம் தந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் எங்களால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சுஜாதா உயிருடன் இருக்கிறார். எனவே எங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மனு செய்தனர்.
மேலும், எங்களை விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்திய மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறையினர் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சம்பந்தப்பட்ட சுஜாதாவை நேரில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு சுஜாதா, குழந்தையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் தந்தை சேவுகனும் வந்திருந்தார்.
சேவுகனிடம் இவர் உங்கள் மகள்தான் என்பதை ஏப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர், எனது மகளின் உடலில் மாடு முட்டிய வடு இருக்கும். அதைப் பார்த்துத்தான் இவரை எனது மகள் என்று அடையாளம் கண்டேன் என்றார்.
அப்போது அரசு வக்கீலைப் பார்த்து, இவருக்கு மரபணு சோதனை நடத்தினீர்களா என்று நீதிபதி கேட்டார். ஆனால் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் பெண்ணுக்கு மரபணு சோதனை நடத்தி அந்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் சுஜாதாவிடம், என்ன நடந்தது, இத்தனை காலம் ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்று நீதிபதி விசாரித்தார். அதற்கு சுஜாதா, என்னை யாரும் கடத்தவில்லை. எனக்கும், கணேசன் என்பவருக்கும் கல்யாணம் ஆகி விட்டது. நான் கணேசனின் ஊரில் வசித்து வருகிறேன். எனது தந்தைக்குப் பலமுறை கடிதம் எழுதினேன். ஆனால் அவர் வரவில்லை.
எனக்கு கிருஷ்ணமூர்த்தி, பழனியை யார் என்றே தெரியாது. அவர்களைப் பார்த்தது கூட இல்லை. அவர்கள் என்னைக் கடத்தவும் இல்லை என்றார்.
அனைவரையும் விசாரித்த நீதிபதி, பின்னர் இந்த வழக்கை முன்பு விசாரித்த இன்ஸ்பெக்டர் மாதவனிடம், இந்த வழக்கில் எப்படி தவறு நடந்தது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள். அதேபோல சுஜாதாவும் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் இவர் சுஜாதாதானா என்பதை அறியும் மரபணு சோதனையை செய்து முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் திரும்பியது, அதிலும் இரண்டரை வயது குழந்தையுடன் வந்தது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கை முடிப்பதற்காக அப்பாவிகளைப் பிடித்து உதைத்து கட்டாய வாக்குமூலம் வாங்கி, அவர்களுக்கு கொலைகாரர்கள்-கற்பழிப்பு கும்பல் என பட்டம் சூட்டி சிறையில் தள்ளியுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications