கட்டிய துண்டுடன் கடத்தப்பட்ட சினிமா அதிபர்- 45 நிமிடங்களில் குற்றவாளிகள் கைது
சென்னை:வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்த சினிமாத் தயாரிப்பாளரை பெங்களூரைச் சேர்ந்த ஒரு கும்பல் குளித்துக் கொண்டிருக்கும்போது கட்டிய இடுப்புத் துண்டுடன் கடத்திச் சென்றது. ஆனால் போலீஸார் அந்தக் கும்பலை முக்கால் மணி நேரத்தில் பிடித்து சினிமா தயாரிப்பாளரை மீட்டனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் என்கிற சிவா. இவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். தற்போது தூயவன் என்கிற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். சைடில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
![]() |
இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர் அணுகினார். முன்பே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளது.
அந்த நட்பின் அடிப்படையில், பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் சொத்தை அடமானம் வைத்து ரூ. 3 கோடி கடன் வாங்கித் தருமாறு சிவாவிடம் கூறியுள்ளார் செந்தில்குமார். சிவாவும் சரி என்று கூறி அதற்குரிய கமிஷனாக ரூ. 12 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார், சிவாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு சிவா, அந்த சொத்தை விற்றால் கூட அந்த அளவுக்கு பணம் கிடைக்காது. எனவே வாஙகிய கமிஷனைக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி கமிஷனைத் தரவில்லை.
இதனால் கோபமடைந்தார் செந்தில்குமார். தன்னுடன் சில அடியாட்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். நேராக மயிலாப்பூரில் உள்ள சிவாவின் வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்குள் அவர்கள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது சிவா குளித்துக் கொண்டிருந்தார்.
![]() |
சத்தம் கேட்டு கட்டிய துண்டுடன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார் சிவா. அவரை, அப்படியே அடித்து, உதைத்து காரில் போட்டுக் கொண்டு பறந்தது செந்தில்குமார் கும்பல். இதைப் பார்த்து அதிர்ந்து போன சிவாவின் மனைவி விஜயா அலறியுள்ளார். தெருவில் போய் கூச்சல் போட்டு உதவி கேட்டுள்ளார். ஆனால் சென்னை மகாஜனங்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.
இருப்பினும் கார் எண்ணை நன்கு பார்த்திருந்த விஜயா உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து காவல்துறை மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கியது. சென்னை நகர எல்லைகள் முழுவதும் உஷார்படுத்தப்பட்டன, அனைத்துப் பகுதி காவல்துறை ரோந்து வாகனங்களும் உஷார்படுத்தப்பட்டன.
துணை ஆணையர் மவுரியாவின் நேரடி நடவடிக்கையில் போலீஸார் காரைத் தேடி கிளம்பினர். இந்த நிலையில் பூந்தமல்லி நோக்கி அக்கார் செல்வதாக போலீஸாருக்குக் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் காரை மடக்குமாறு பூந்தமல்லி போலீஸாருக்கு உத்தரவு பறந்தது.
இதையடுத்து தயாராக இருந்த பூந்தமல்லி போலீஸார், சிஎஸ்ஐ சர்ச் அருகில் கார் வந்தபோது மடக்கினர். அப்போது காருக்குள் சிவாவும் மற்றவர்களும் இருந்தனர்.
சிவா, போலீஸாரைப் பார்த்ததும் காப்பாற்றுமாறு கோரி கதறி அழுதார். அவரை பத்திரமாக மீட்ட போலீஸார் மற்றவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிவாவைக் கடத்திச் சென்ற செந்தில்குமார், அவரது கூட்டாளிகள் சேத்தன், நவீன், மஞ்சுநாத், சந்தோஷ், காந்தராஜ், பிரபு, இன்னொரு மஞ்சுநாத், இன்னொரு நவீன் மற்றும் கார் டிரைவர் அசோக் குமார் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். கைதான அனைவருக்கும் வயது 25க்குள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சேத்தனுக்கு வயது 18தான் ஆகிறது.
போலீஸ் விசாரணையில் சிவாவும் பல பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
கட்டிய துண்டோடு கடத்தப்பட்ட சிவா 45 நிமிடங்களிலேயே மீட்கப்பட்டார். இதையடுத்து போலீஸாரை ஆணையர் நாஞ்சில் குமரன் பாராட்டினார்.
ஆனால் பொதுமக்கள் சுதாரிப்பாக இருந்து, சிவாவின் மனைவியின் குரலுக்கு மதிப்பளித்து உதவ வந்திருந்தால் இந்தக் கடத்தலே நடந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications